×

குஜராத்: பா.ஜ.க மந்திரியின் மகனைத் தடுத்து நிறுத்திய பெண் காவலர் ராஜினாமா! – எழுதி வாங்கியதாகப் புகார்

குஜராத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நள்ளிரவில் காரில் வலம் வந்த அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்திய காவலர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு சூரத் நகரில் நள்ளிரவில் பெண் காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாஸ்க் அணியாமல் ஐந்து பேர் ஒரே காரில் வந்துள்ளனர். அவர்களை அந்த
 

குஜராத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நள்ளிரவில் காரில் வலம் வந்த அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்திய காவலர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு சூரத் நகரில் நள்ளிரவில் பெண் காவலர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாஸ்க் அணியாமல் ஐந்து பேர் ஒரே காரில் வந்துள்ளனர். அவர்களை அந்த பெண் காவலர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்.

உடன் காரில் வந்தவர்கள் நாங்கள் யார் தெரியுமா, எங்களையே தடுத்து நிறுத்துகிறாயா, உன்னை என்ன செய்கிறோம் பார் என்று கூறி குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கானானியின் மகன் பிரகாஷ் கானானிக்கு தகவல் கொடுத்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் அமைச்சரின் காரில் பிரகாஷ் அங்கு வந்து போலீசாரிடம் அவர்களை விடுவிக்கும்படி கூறியுள்ளார். ஆனால், காவலர் சுனிதா யாதவ் அவர்களை விடுவிக்க மறுத்தார். இதனால் அமைச்சரின் மகனுக்கும் பெண் காவலர் சுனிதா யாதவுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது கொரோனா ஊரடங்கு உள்ள நேரத்தில், வீட்டைவிட்டு வெளியே வர உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார், இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன். நள்ளிரவு 12 மணிக்கு ரோட்டில் காவலில் இருக்கும் நாங்கள் என்ன முட்டாளா? என்று காரசாரமாக கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சரின் மகன் பிரகாஷ், உன்னை 365 நாளும் இதே இடத்தில் நிற்க வைக்கிறேன் என்று சவால் விட்டுள்ளார். அதற்கு சுனிதா, நான் உங்கள் வீட்டு பணிப்பெண்ணோ, அடிமையோ இல்லை என்று பதிலடி அளித்தார். இவை அனைத்தையும் அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதி இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே சுனிதா உள்ளிட்டவர்களை உடனடியாக காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே அமைச்சரின் மகனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்திய சுனிதா யாதவ் அவசர அவசரமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் கூறவே தற்போது அவர் ராஜினாமா செய்துவிட்டதாக குஜராத் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா யாதவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக குஜராத் போலீசாருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவருக்கு மீண்டும் அதே காவல் நிலையத்தில் பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நண்பரின் தந்தைக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்கு சென்றதாகவும், அவர்களை சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தியதால்தான் அமைச்சரின் மகன் தலையிட்டார் என்றும் அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.