×

இன்று முதல் இரவு ஊரடங்கு... ஜன.26 வரை பள்ளிகளில் நேரடி வகுப்பு ரத்து - எங்கனு தெரியுமா?

 

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.  இரண்டாம் அலையின் தொடக்கத்தில் இருந்தது போல இப்போது கொரோனா அதிவேகமாகப் பரவுகிறது. வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீரென இரட்டிப்பானது. நேற்று முன்தினம் 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 33 ஆயிரத்து 750 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றாம் அலை ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டையொட்டி இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தின. கடற்கரை போன்ற பொதுவெளிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோவாவில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கே திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. புத்தாண்டிற்குப் பிறகு பாசிட்டிவிட்டி விகிதம் 10.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆகவே உடனடியாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநில அரசுக்கு கோவிட் தடுப்பு குழு ஆலோசனை வழங்கியது,. அதன்படி இன்று முதல் அங்கே இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 6 மணிக்கு முடிவடையும். பொதுவெளியில் மட்டுமல்லாமல் உள் அரங்கில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளுக்கும் இரவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்பு ஜனவரி 26ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.