திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனம் !
திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.
கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெறும் அனைத்து பணிகளும் தலைகீழாக மாறியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் அலைமோதும் கூட்டம், கோவிந்தா கோஷம் என பரபரப்பாக இயங்கி வந்த திருப்பதி கொரோனாவால் சற்று ஆட்டம் கண்டது எனக்கூறலாம். இதையடுத்து கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விசேஷமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கூட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனிடையே கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தினந்தோறும் மூவாயிரம் பக்தர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி திருப்பதி அலிபெரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் காலை 5 மணி முதல் இலவச தரிசனத்திற்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இலவச தரிசனம் நாளை முதல் தொடங்குகிறது.