வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதியா? - அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..
டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், வங்கதேச வன்முறை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்களித்துப் பேசினார்.
வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உயிரை கையில் பிடித்துக்கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேற்று இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அவர் விரைவில் லண்டன் அல்லது பெலாரஸ் நாட்டுக்குச் செல்வார் என கூறப்படுகிறது. அவர் இந்த நிலையில் வங்கதேச சூழல் குறித்தும், அந்நாட்டு பிரதமர் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். ஹசீனா பிரிட்டனுக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் இருப்பதால், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பது குறித்தும், வங்கதேசத்தில் நிகழும் அரசியல் மாற்றம், கல்வரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க இருக்கிறார். இதற்கான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது கூடியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே , டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “வங்கதேச நிலைமை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில் வங்கதேசத்தில் இருந்து 12,000 முதல் 13,000 இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய அவசர நிலைமை இல்லை. இருந்தாலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். ஷேக் ஹசீனா தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கும் வரை மத்திய அரசு காத்திருக்க முடிவு செய்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டுவரும் அளவுக்கு அங்குள்ள சூழல் மோசமாகவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, “வங்கதேச வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “தற்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது” என விளக்கம் அளித்தார். மேலும், வங்கதேசம் விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.