×

"தீபாவளிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசு" - ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!
 

 

குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே போனஸ் மற்றும் பரிசுகள் தான் நியாபகத்துக்கு வரும். அந்த வகையில், எல்லா நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு, போனஸ் போன்றவை வழங்கப்பட்டன. வழக்கம் போல மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூட போனஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக கொடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சுபாஷ் தவார் தான் தனது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கியிருக்கிறார். பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தனது நிறுவனத்தில் பணியாற்றும் 35 ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொடுத்ததற்கு பெட்ரோல் விலை உயர்வு ஒரு காரணம் என்றாலும் சுற்றுச் சூழல் மாசடையக் கூடாது என்பதற்காக இந்த முடிவை தான் எடுத்ததாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் இயன்றதை தான் செய்து வருவதாகவும் சுபாஷ் தெரிவித்துள்ளார். சுபாஷின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.