கோவை கட்டுப்பாடுகள் காரணமாக களை இழந்த ஓணம்- கோயில்களில் பக்தர்கள் வருகை குறைந்தது
கோவை
கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு ஓணம் பண்டிகை களை இழந்துள்ளது. கோவில்களில் வழிபடவும் கட்டுப்பாடுகள் உள்ளதால், ஓணம் கொண்டாட்டம் குறைந்துள்ளது.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகை ஓணமாகும். பத்து நாட்கள் முன்பிருந்தே ஓணம் பண்டிகை களை கட்டிவிடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்களுக்குள் மக்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என அரசு அறிவித்ததால் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை அன்று, காலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து தீபம் ஏற்றி வழிபடுவர். அனைவருக்கும் தீபாராதனை, பிரசாதங்கள், வழங்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டும், வழக்கத்துக்கு மாறாக ஓணம் பண்டிகை காணப்பட்டது. குறைந்தளவு மட்டுமே பக்தர்கள் காணப்பட்டனர்.
பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வெளியில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்தனர். பகதர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வெளியில் நின்றவாறே வழிபட்டுச் சென்றனர். இதனால் ஓணம் பண்டிகை பொலிவிழந்து காணப்பட்டது.
– ஆரோக்கியராஜ்