×

கடன் கொடுக்காத வங்கியை தீயிட்டு கொளுத்திய நபர்

 

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடன் தர மறுத்த வங்கியை தீயிட்டு கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம், பியாட்கி தாலுக்கா ஹெடிகோண்டா கிராமத்தை சேர்ந்த வாசிம் முல்லா என்ற நபர் அதே பகுதியில் உள்ள கனரா வங்கியில், தனக்கு புதிய தொழில் துவங்க முத்ரா கடன் கேட்டு கடன் வழங்குமாறு மனு அளித்துள்ளார். இவரது மனுவை பரிசீலித்த வங்கி மேலாளர் அவரது சிபில் மதிப்பீடு குறைவாக இருந்த காரணத்தினால் அவரது மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசிம் முல்லா கடந்த சனிக்கிழமை இரவு அந்த வங்கி வளாகத்திற்கு சென்று வங்கியின் ஜன்னலை உடைத்து தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை வங்கி வளாகத்திற்குள் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார். 

அங்கிருந்த பொதுமக்கள், தப்பிக்க முயற்சித்த முல்லாவை பிடித்துக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக வங்கியில் இருந்த உட்கட்டமைப்பு முழுவதுமாக எரிந்து நாசமாகி சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதமடைந்தது. வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் பணம் இந்த தீ விபத்தில் இருந்து இருந்து எரிந்து சாம்பல் ஆகாமல் தப்பித்துள்ளது. வங்கிக்கு தீ வைத்த வாசிம் முல்லாவை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 436, 477, 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.