டெல்லி வன்முறை : செங்கோட்டையில் வாள் சுழற்றிய நபர் கைது!
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவத்தின் போது செங்கோட்டையில் வாள் சுழற்றிய மனீந்தர் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜன.26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திய போது, டெல்லியே கலவர பூமியாக மாறியது. டெல்லி போலீசாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக 100ம் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் வாள் சுழற்றி போராட்டத்தை தூண்டிய நபரை போலீசார் தேடி வந்தனர்.
விவசாய சங்கத் தலைவர்களின் பேச்சைக் கேட்டு ஆர்வமடைந்து போராட்டத்தில் பங்கேற்றவர் மனீந்தர் சிங். கார், ஏசி மெக்கானிக்கான இவர், வன்முறை நடந்த தினத்தன்று கையில் இரண்டு வாள்களை ஏந்தி வாள் சுழற்றியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்ட போலீசார், வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவருடன் இருந்த 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், டெல்லியின் பிதம் புரா பகுதியில் நேற்று மாலை மனீந்தர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்வரூப் நகரில் அவர் வாள் பயிற்சி பள்ளி நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் இருந்து இரு வாள்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.