×


ஊழல் வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை!

 

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். 

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அவரை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர்.  சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அவர் நேற்று விஜயவாடா நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது மேலும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். ராஜமுந்திரி மத்திய சிறையில் வைத்து சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழு விசாரணை  நடத்தி வருகின்றனர். திறன் மேம்பாட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் மட்டுமே தனது வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்க சந்திரபாபு நாயுடுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.