×

ஒரேயொரு தடுப்பூசி போட்டுக்கோங்க... எல்இடி டிவி ஃபிரிட்ஜ் பரிசுகளை அள்ளுங்க!

 

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்களை செலுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. மத்திய அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துகொடுக்க, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகளவில் செலுத்தி வருகிறது. அதேபோல மெகா தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி, மக்களை வரவழைக்க கவர்ச்சியான பரிசுப் பொருட்கள் இலவசம் என அறிவிக்கின்றன.

இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அலை அலையாக வருகின்றனர். குலுக்கல் முறையில் பரிசுப் பொருட்கள் வழங்கும் நடைமுறையையும் அரசுகள் ஏற்படுத்தின. இந்த குலுக்கல் முறை தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்பட்டது. பெரும் வரவேற்பையும் பெற்றது. தற்போது இது பல்வேறு மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சந்திரபூர் மாநகராட்சி இந்த முறையைக் கையிலெடுத்துள்ளது. 

தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் மிகப்பெரிய எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 24ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ஃப்ரிட்ஜ், இரண்டாம் பரிசாக வாஷிங் மெஷின், மூன்றாம் பரிசாக எல்இடி டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு மிக்ஸி, கிரைன்டர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.