தெற்கு அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
கவுகாத்தி: தெற்கு அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அசாமில் இன்று ஏற்பட்ட தொடர் நிலச்சரிவில் சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.
நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் கச்சார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 7 பேரும், ஹைலகண்டி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 7 பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 6 பேரும் அடங்குவர். இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.