விவாகரத்து செய்யாமல் 2வது திருமணமா? - அசாம் அரசு அதிரடி அறிவிப்பு
முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வ விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை அறிவித்துள்ளது அசாம் அரசு.
விவாகரத்து செய்யாமல் முதல் மனைவியைக் கைவிட்டு மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் ஊழியர்களின் சம்பளத்தில் 20% அசாமில் பிடித்தம் செய்யப்படும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். முதல் மனைவி அரசிடம் புகார் அளித்தால், அந்த ஊழியரின் சம்பளத்தில் 20% வரை பிடித்தம் செய்து, நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சட்டநடவடிக்கை முடியும் வரை இந்த நிதியுதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் விவாகரத்து நடைமுறைகளை முடிக்காமல் தங்கள் மனைவிகளை விட்டுப் பிரிந்து, வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவோ அல்லது திருமணம் செய்துகொண்டதாகவோ கூறப்படும் பல வழக்குகளை அரசு எதிர்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார். தனியார் துறையில் உள்ள பெண்களுக்கும் இதேபோன்ற பாதுகாப்பை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
முறையான விவாகரத்து இல்லாமல் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், அவர்களது வழக்குகள் சட்டப்பூர்வமாக விசாரிக்கப்படும்போது நிதி உதவியின்றி தவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும்.