நேபாளம் பற்றி வாய்திறக்கக் கூடாது என்று ஆதித்யநாத்துக்கு சொல்லுங்கள்! – நேபாளம் எச்சரிக்கை
இந்திய – நேபாளம் எல்லைப் பிரச்னைப் பற்றி எல்லாம் உ.பி முதல்வர் யோகி பேசக் கூடாது என்று நேபாள பிரதமர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியா சீனா வரை செல்ல பாதை ஒன்றை அமைத்திருந்தது. இதன் மூலம் கைலாஷ் மானசரோவர் பயண நேரம் குறைந்துவிட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்கள் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக நேபாளம் பிரச்னை கிளப்பியது. மேலும் காலாபானி பகுதியில் திருத்தப்பட்ட வரைபடத்தையும் வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தை கைப்பற்றுவோம் என்று மிரட்டும் வகையில் அவர் பேசியதற்கு நேபாளம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நேபாள பிரதமர் ஷர்மா ஒலி நேபாள நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர், “யோகி ஆதித்யநாத் நேபாளம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கள் நியாயமற்றது முறையற்றதும் கூட. இந்திய அரசின் பொறுப்பில் உள்ளவர்கள் யாராவது அவருக்கு இது பற்றி எடுத்துச் சொல்லுங்கள். அவருக்கு சம்பந்தமில்லாத பகுதியில் நுழைந்து கருத்து கூறுவது முறையானது இல்லை என்று விளக்குங்கள். நேபாளத்தை மிரட்டும் பேச்சு கண்டிக்கத்தக்கது” என்றார்.