கட்டுப்பாடுகளால் சரக்கு போக்குவரத்து துறைக்கு தினமும் ரூ.315 கோடி இழப்பு.. ஏ.டி.எம்.டி.சி. தகவல்
மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளால் சரக்கு போக்குவரத்து முடங்கி விட்டதால் சரக்கு போக்குவரத்து துறைக்கு தினமும் ரூ.315 கோடி இழப்பு ஏற்படுகிறது என அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸின் (ஏ.டி.எம்.டி.சி.) முன்னாள் தலைவரும் கோர் கமிட்டியின் தலைவருமான பால் மால்கிட் சிங் கூறியதாவது: மாநில அரசின் கட்டுப்பாடுகளால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது போக்குவரத்து துறையை பாதிக்க தொடங்கி விட்டது. நாடு முழுவதும் நிலவும் கட்டுப்பாடுகளால் சரக்கு போக்குவரத்து துறை தினமும் ரூ.315 கோடி வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது.
எங்களது கணிப்பின்படி, நாடு முழுவதுமாக டிரக்குகள் தேவை 50 சதவீதம் குறைந்து விட்டது. தற்போது தனிநபர் பாதுகாப்பு உபகரண கருவிகள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள், உணவு வகைகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே போக்குவரத்து வசதிகள் பயன்படுத்தப்படுகிறது. மற்ற பொருட்களுக்கு மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போக்குவரத்து சுத்தமாக நின்று விட்டது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏழை டிரக் டிரைவர்களை கோவிட்-19 கட்டுப்பாடுகள் முடக்கியுள்ளது. வரி, இன்ஸ்யூரன்ஸ், பணியாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு சம்பளம், நிறுவனம் மற்றும் நிர்வாக செலவினம், மாதந்திர தவணை தொகை ஆகியவற்றை சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு போல் சிறிது காலத்துக்கு சுங்க கட்டணம் மற்றும் சாலை வரிகளில் விலக்கு அளிக்க வேண்டும். டிரக் டிரைவர்களுக்கு மாநில வரி ரத்து, அனுமதி மற்றும் பிட்னஸ் கட்டணம் தள்ளுபடி, டிரக் மற்றும் பஸ்களுக்கு இலவச பார்க்கிங் போன்ற நிவாரண நடவடிக்கைகள் செயல்படுத்த அரசு திட்டமிட வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.