கோவில் திருவிழாவுக்கு பிளக்ஸ் வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு
திருவாரூரில் கோவில் திருவிழாவில் பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டகச்சேரி கிராமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் ஆனி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோவில் திருவிழாவிற்காக ஊர் பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் வைப்பதற்கு, மரத்தின் மீது தூக்கி காட்டிய போது எதிர்பாராத விதமாக மின் கம்பி மீது பிளக்ஸ் பேனர் உரசியதால் அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ் ( 15 ) மற்றும் ரூபன் (22) ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த இளைஞர்கள் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே மதன்ராஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மதன்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது ரூபன் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.