×

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்

 

பெங்களூருவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய நபர் தலைமறைவானார். குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில் சுங்கத்கட்டே என்ற பகுதியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர் அரசு வங்கி பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து வங்கி தேர்வுகளில் கவணம் செலுத்தி அனைத்து வங்கி தேர்வுகளை எழுதி கொண்டு  பகுதி நேரமாக தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் என்ற நபர் பல வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு நாகேஷ் இந்த பெண்ணிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தனது காதலை தெரிவித்து மணம் முடிக்க சம்மதம் கோரிய போது அதற்கு பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

கடந்த சில வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு அந்த பெண் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்ற நாகேஷ் தனது காதலை ஏற்று கொள்ள ஒரு நாள் கெடு விதிப்பதாகவும் இல்லையெனில் உனது முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார். நாகேஷ் மிரட்டலை பெரிதாக அந்த பெண் எடுத்துக் கொள்ளாமல் நேற்று வழக்கம் போல அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த நாகேஷ் அந்த பெண்ணிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  அதற்கு திட்டவட்டமாக அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரம் அடைந்த நாகேஷ் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து பெண்ணின் முகத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் முகம் 25% பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட் வீசிய குற்றவாளியான நாகேஷ் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.