வீரப்பனை பிடிக்க பயன்படுத்திய ஜீப்! சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வந்தது
வீரப்பனை பிடிக்க பயன்படுத்திய ஜீப் தற்போது புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. வனத்துறை அதிகாரி சீனிவாஸ் வீரப்பனை சுற்றி வளைத்தபோது சரணடைவது போல் சென்று அதிகாரியை சுட்டு விட்டு தப்பினார் வீரப்பன். அந்த ஜீப் புதுப்பிக்கப்பட்டு அதிகாரி சீனிவாசன் நினைவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு -கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். இருமாநில அரசுகளும் வீரப்பனை பிடிக்க பல வருடங்களாக தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தன.
கர்நாடக அரசு சார்பில் வீரப்பனை பிடிப்பதற்காக 1990 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட வனத்துறை அதிகாரி சீனிவாசன் . ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பொறுப்பில் வீரப்பனை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் மூன்று ஜீப்புகளை பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தாம் தேதி இந்த ஜீப்புகளில்தான் சென்று சீனிவாஸ், வீரப்பனை சுற்றிவளைத்து இருக்கிறார்.
அப்போது வீரப்பன் சரணடைவது போன்று நடித்து வனத்துறை அதிகாரி சீனிவாசனை சுட்டுவிட்டு தப்பி இருக்கிறார். இதன் பின்னர் இந்த ஜீப்புகளை யாரும் பயன்படுத்தவில்லை. ஒரு ஜீப் வீரப்பனை பிடிக்க சென்றபோது பாலாறு வனப் பகுதியிலேயே விட்டு செல்லப்பட்டது . முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கொன்று விட்டதால் பொது மக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு இந்த ஒரு ஜீப் பழைய இரும்புக் கடையில் போடப்பட்டிருக்கிறது.
மலை மாதேஸ்வர வனத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்து இருக்கும் அதிகாரி சோமசேகர் , மறைந்த சீனிவாஸ் குறித்தும் அவரது ஜீப் குறித்து, தகவல் தெரிந்து கொண்டிருக்கிறார். உடனே அவர் சீனிவாசனுக்கு நினைவுச்சின்னமாக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து, பாலாறு சென்று அந்த ஜீப்பை மீட்டு மைசூரில் உள்ள மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கு புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது .
பின்னர் மைசூரிலிருந்து கொள்ளேகால் வந்து மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பூஜை போட்டிருக்கிறார். இதற்காகவே கூடாரம் அமைத்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வனத்துறை அலுவலகத்திற்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஜீப்பை பார்வையிட்டு செல்கிறார்கள்.