×

கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்துவிட்டு, ஓடிவிட்டதாக கூறிய கொடூர கணவன்

 

6 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை வரதட்சணைக்காக கொன்று புதைத்த கொடூர கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா உப்பிராணி அருகே கங்ககொண்டனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 25). இவருக்கும், தாவணகெரே அருகே உள்ள ஐகூர் கிராமத்தை சேர்ந்த லோகேஷப்பா என்பவர் மகள் சந்திரகலாவுக்கும்(21) கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 13- ஆம் தேதி திருமணம் நடந்தது. 

சந்திரகலாவின் தந்தை பால் வியாபாரம் செய்து வரும் ஏழை என்றாலும் திருமணதத்தின் போது மோகன்குமார் அதிகமாக கேட்ட அனைத்து வரதட்சணை பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்து தனது மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி உள்ளார். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் சந்திரலேகா கர்ப்பமான நிலையில் மீண்டும் பணம் மற்றும் பொருட்களாக மேலும் வரதட்சணையை பெற்று வா என்று தனது மனைவியை மோகன்குமார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளார். 

ஏழ்மையில் கடன் வாங்கி தனக்கு திருமணம் செய்து வைத்துள்ள தந்தைக்கு மீண்டும் சிரமம் கொடுக்க மனம் இல்லாத சந்திரலேகா வரதட்சணை பணம் குறித்து தனது தந்தை மற்றும் தாயிடம் எதுவும் பேசாமல் கணவரின் கொடுமைகள் குறித்து தனது அக்காவிடம் மட்டும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்குமார் இரண்டு முறை வரதட்சணை பெறாமல் வீட்டிற்கு வர வேண்டாம் என தனது மனைவியை அவரது வீட்டிற்கு அடித்து துன்புறுத்தி அனுப்பியுள்ளார். 

சந்திரலேகா குடும்ப உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்து மீண்டும் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு மோகன்குமாரின் தாய் தந்தை மற்றும் அவரது சகோதரி என ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் வரதட்சணைக்காக சந்திரலேகாவை துன்புறுத்தி உள்ளனர். சந்திரலேகா 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து செல்லாமல் அவருக்கு தேவையான உணவு வழங்காமல் தந்தை வீட்டில் இருந்து அனுப்பி வைத்த உணவுப் பொருட்களை கூட சாப்பிட விடாமல் தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள் அவரை கொடுமைப்படுத்தியுள்ளதாக சந்திரலேகா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

வரதட்சணை கொடுமை உச்சகத்தில் இருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் தனது மனைவியை காணவில்லை என்று மோகன்குமார் தனது மாமனாரின் வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவியை நான் தேடப்போவது இல்லை என்றும் வேண்டும் என்றால் நீங்களே தேடிக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.மனைவி காணாமல் போன பிறகு இது குறித்து மோகன்குமார் காவல்துறைக்கு புகார் அளிக்காத நிலையில் வீட்டில் இருந்து நான்காயிரம் ரூபாய் பணம் மற்றும் துணிமணிகளை எடுத்துக்கொண்டு தனது மனைவி வீட்டை விட்டு ஓடி விட்டதாக தொடர்ந்து நாடகம் ஆடியுள்ளார்.

மோகன் குமார் மீது சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் மோகன் குமார் மற்றும் அவரது தாய், தந்தையினர் தலைமறைவாகி விட்டனர். 25 நாள் தலைமறைவாக மோகன் குமார் இறந்த நிலையில் நேற்று அவனது வழக்கறிஞரை சந்தித்து ஜாமீன் மனுவில் கையொப்பமிட வந்த போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் அவனை கைது செய்தனர் பின்பு காவல் நிலையத்தில் உரிய முறையில் விசாரித்த போது தனது மனைவியை கொலை செய்து வனப்பகுதியில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். 

கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய மோகன்குமார் அவர் 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளான். பின்னர் அவரது உடலை தனது காரில் யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் அஜ்ஜாம்புரா தாலுகா உணுசேகட்டே பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்து சென்று குழித்தோண்டி புதைத்துள்ளார். பின்னர் அவர் மனைவி மாயமானதாக நாடகமாடியுள்ளான். தலைமறைவாக இருந்த மோகன் குமார் கைது செய்யப்பட்டு விசாரணையில் மனைவியை அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று வனப்பகுதிக்கு அழைத்து சென்று புதைக்கப்பட்ட சந்திரலேகா உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர் . 

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அதே ஊரில் தனது மகளின் இறுதி சடங்கை நடத்திய சந்திரலேகா குடும்பத்தினர் மோகன் குமாரின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். மோகன்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்த காவல்துறையினர் தொடர்ந்து தலைமறைவாக உள்ள மோகன் குமாரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.