×

மத்திய பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ - 10 பேர் உடல் கருகி பலி..  

 


மத்திய பிரதேசம் மாநிலத்தில்  தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில்  தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.   இந்நிலையில் இன்று இந்த மருத்துவமனையில்  திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால்,   மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள்  உடனே   அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருந்தபோதிலும் தீ  அதிகளவு பரவிவிட்டது.  இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 நோயாளிகள் உள்பட   10 பேர்  உடல் கருகி  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த   மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  முதலில் தீ பற்றியதாகவும்,   பிறகு மற்ற பகுதிகளுக்கு தீ வேகமாக பரவியதாகவும்  தகவல்  தெரிவிக்கின்றனர்.  மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது காவல்துறையினர்  நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது. மேலும், தீயில் சிக்கி படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும்,  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.