×

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள், அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுத்திடுக - சுப்ரீம் கோர்ட்.. 

 

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ  மாணவர்கள், அண்டை நாடுகளில்  படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது.  

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம்  தேதி தாக்குதலைத் தொடங்கியது.  இதன் காரணமாக அங்கு படித்துக்கொண்டிருந்த 20, 000 இந்திய மாணவர்கள் அவசர அவசரமாக தாய்நாடு அழைத்து வரப்பட்டனர்.  6 மாதங்களைக் கடந்து அங்கு போர் நடைபெற்று வருவதால்,  மருத்துவ மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.  இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களிலேயே அவர்கள் மருத்துவக் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை மாணவர்களும், அவர்களது  பெற்றோரும் வலியுறுத்தி வந்தனர்.   ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்காமல் மௌனம் சாதித்து வந்தது.  

 இதனையடுத்து மாணவர்கள் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.  இதற்கிடையே  இந்திய மருத்துவ கவுன்சிலும்,   வெளியுறவு  அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வ உக்ரைன் பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மருத்துவ மாணவர்கள், வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடரலாம் என்றும்,  மாணவர்கள் நேரடியாக புதிய செமஸ்டரில் இணைந்து  படிப்பைத் தொடரலாம் என்றும் தெரிவித்தது.   அதேநேரம்  உக்ரைனில் மருத்துவம்  படித்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.  

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில்  உக்ரைனில்  திரும்பிய மருத்துவ மாணவர்கள்  இந்தியாவில் மருத்துவ கல்வியை  நிறைவு செய்ய அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது,   உக்ரைனில் இருந்து மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம்  அறிவுறுத்தியது.  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை ஏற்படுத்துமாறும்  உத்தரவிட்டது. இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என சோசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.