×

ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்  - அமலாக்கத்துறை நடவடிக்கை

 

பிரபல மொபைல் நிறுவனமான “ஸியோமி”-யின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமி, எம்ஐ( MI) என்கிற பெயரில் நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஸியோமி  இந்தியா  நிறுவனத்துக்குச்  சொந்தமான சுமார் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை  பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஸியோமி மட்டுமல்லாமல் oppo உள்ளிட்ட 3 செல்போன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கடந்த டிசம்பர் மாதம், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களுக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனையை  நடத்தியிருக்கிறது.

அதில், இந்தியாவின்  அந்நிய செலாவணி நிர்வாக சட்டம், 1999க்கு புறம்பாக நிதி பரிவர்த்தனை செய்திருப்பது  தெரியவந்தது. ஸியோமி  நிறுவனம்  இரண்டு போலி நிறுவனங்களில் இந்த மோசடி தொகையை உருவாக்கி, அதில் ரெமிட்டன்ஸ் தொகையை செலுத்தி தனக்கே அதை பயன்படுத்துயதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.   இதனையடுத்து  ஸியோமி நிறுவனம்  பலகோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும், அந்நியசெலாவணி முறைகேடும் நடைபெற்றள்ளதாக வழக்குப்பதிவு  செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து  கடந்த 13-ம் தேதி ஸியோமி நிறுவனத்தின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குநர் விசாரணைக்கு ஆஜராகும்படி  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து  ஸியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான சுமார் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.