×

ஹிஜாப் சர்ச்சை - உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு  வருகிறது. 

ஹிஜாப் விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது . கர்நாடக மாநிலத்தில் பல மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில் இதற்கு ,ஆதரவாகவும், எதிராகவும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பி.யூ. அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில்  இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தை நாடிய நிலையிலும் , இன்னமும்கூட பதட்டமான சூழ்நிலையே ங்கு நிலவி வருகிறது.   மாணவர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பி கற்களை வீசி தாக்கிக் கொண்டதன்  எதிரொலியாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . தடை உத்தரவு நாளை காலை 6 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள உடுப்பி மாவட்ட காவல்துறை , பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்திற்கு கூட்டம் கூடவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும்  அனுமதி இல்லை என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சையின் காரணமாக பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ஆம் தேதி வரை பிறக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது உடுப்பி மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.