×

கடன் பெற்றவர்களை  இரவு 7 மணிக்குமேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது -  ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. 

 

 கடன் வாங்கியவர்களை  இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைத்து கடனை செலுத்துமாறு கேட்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறுபவர்கள் மீது,  கடனை திரும்ப  வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகி வருகின்றன.  கடுமையான வசைச்சொற்கள், அவதூறான பேச்சுக்கள் போன்ற கொடுமைகளை  தாங்க முடியாமல், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றன.  இதுபோன்ற சம்பவங்களை தடுக்க,  ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை  ஏற்கனவே வெளியிட்டது.  ஆனால்  அவை முறையாக பின்பற்றப்படாததால், நேற்று மீண்டும்  கூடுதல்   உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.  

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது.

கடன் தவணையை செலுத்துமாறு, இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும்  இந்த புதிய உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள்  ஆகிய அனைத்திற்கும்   பொருந்தும் என்றும்  ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.