இன்று முதல் அபராதம்.. நேற்று ஒரே நாளில் சுமார் 68 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல்..
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் சுமார் 68 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வங்கிக் கணக்கின் வழியாக மாதம் ஊதியம் பெறுவோரும், தொழிம் முனைவோரும், வருவாய் ஈட்டுவோரும் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல் பெறும் ஒவ்வொருவரும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கான விவரங்களை அதே ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வருமான வரித் தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் 2021 - 2022 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் நேற்றுடன் ( ஜூலை 31-ம் தேதியுடன்) முடிவடைந்தது. இன்று முதல் ( ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு ) சமர்ப்பிக்கப்படும் , ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமான வரிக்கணக்கிற்கு1000 ரூபாயும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரிக்கணக்கிற்கு 5000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.
இதனையொட்டி நேற்று பலரும் ஆர்வத்துடன் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நிறைவடைவதையொட்டி, நேற்று ஒரே நாளில், சுமார் 68 லட்சம் பேர் தங்கள் கணக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 4.5 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது.