பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா - ஒடிசாவில் பரபரப்பு!!
ஒடிசாவில் பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று இந்தியாவில் 3,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24, 064 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 57,495ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்தியாவில் இதுவரை 190.20 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.