×

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை- ஒன்றிய அரசு

 

மேகதாது குடிநீர் மற்றும் மின்சார திட்டத்திற்கு கர்நாடகா அரசுக்கு எவ்வித அனுமதியும்  வழங்கவில்லை, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வரை அவை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளவில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். 

மேகதாது குடிநீர் மற்றும் மின்சாரத் திட்டத்திற்கு ஒப்புதல் கோரி கர்நாடக அரசு ஒன்றியய அரசிடம் சமர்ப்பித்து உள்ளதா? மேலும் இத்தகைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குவதற்கு ஏதேனும் பரிசீலனை செய்துள்ளதா? என நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடூ, மேகதாது அருகே நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டதின் சாத்தியக்கூரை அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. 

அதற்கு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியது. அனுமதி வழங்கப்பட்டதன் பேரில் 2019ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் சமர்ப்பித்த கர்நாடகா அரசு திட்டம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய குறித்ததில் விவாதிக்க பட்டியலிடப்பட்டது. ஆனால் இரண்டு மாநிலங்களுடைய ஒத்துழைப்பும் விவாதத்திற்கு தேவை என்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரை இத்திட்டம் தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை எனவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.