×

மெட்ரோ பாலம் இடிந்து தாய், மகன் பலியான சம்பவம்- அரசுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

 

மெட்ரோ பாலம் இடிந்து விழுந்து தாய் மகன் உயிரிழந்த சம்பவம் கர்நாடக அரசுக்கு எதிராக சுயமாக வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பெங்களூரு நகரில் நாகவாரா என்ற பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணி நடந்து வந்த போது மெட்ரோ பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த 28 வயதான தேஜஸ்வினி மற்றும் அவரது இரண்டரை வயதான மகன் விகான் இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு மெட்ரோ நிறுவனம் சார்பில் 20 லட்சம் மற்றும் முதல்வர் சார்பில் 10 லட்சம் என நிவாரண நிதி வழங்கப்பட்டது. 

பெங்களூரு போலீசார் மெட்ரோ நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் பெற்ற நாகார்ஜுனா கட்டுமான நிறுவனம் அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மெட்ரோ பொறியாளர்கள் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ பாலம் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராகவும் பெங்களூரு மெட்ரோ நிறுவனத்திற்கு எதிராகவும் சுயமாக வழக்கு பதிவு செய்ய பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி பீ வரலே பெங்களூரு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக யாரேனும் பொதுநல வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் பொதுநல வழக்கு தொடரப்படாமல் இருந்தால் பதிவாளர் தானாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.