×

மங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றம் - மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை.. 

 

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி மத்திய  உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில்  ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரீக் (24)  என்கிற இளைஞரும்  படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முகமது ஷாரிக் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினார்.  மேலும், தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டதும்,  போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியதும், ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டதும்  தெரியவந்துள்ளது. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், இதற்கும்  தொடர்புள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.  

இதுதொடர்பாக மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படை அமைத்து மைசூரு, ஷிமோகா, தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், கேரளாவில் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மங்களூரு மாநகர எஸ்பி சசிகுமார் உள்ளிட்டோர் மங்களூருவில் குண்டுவெடித்த நகோரி சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.   பின்னர் அமைச்சர் அரக ஞானேந்திரா,  காயமடைந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரியை சந்தித்து நலம் விசாரித்ததுடன்,  சிகிச்சைக்கு உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

பின்னர் இதுகுறித்து பேசிய அமைச்சர் அரக ஞானேந்திரா, “ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயலால் ஈர்க்கப்பட்ட முகமது ஷரீக் கடந்த சில ஆண்டுகளாக சதி செயலை அரங்கேற்றும் எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார். மங்களூரு போலீசார், கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குக்கர் வெடிகுண்டு வழக்கை கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாற்றியது. 2 நாட்களுக்கு முன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ.வுக்கு கர்நாடக காவல்துறை அனுப்பியுள்ளது.”என்றார்.