×

மோடி தொடங்கி வைத்த சொகுசு கப்பல் தரை தட்டி நின்றது

 

பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் பயணிகள் சொகுசு கப்பல் ஆற்றின் நடுவே தரை தட்டி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக் கப்பல்-எம்வி கங்கா விலாஸை பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காணொலி மூலம்  கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், டென்ட் சிட்டியையும் திறந்து வைத்தார். மேலும் ரூ.1000  கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின்  இந்த நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை ஏற்படுத்தும் என ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எம்வி கங்கா விலாஸ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் செய்து, இந்தியா மற்றும் பங்களாதேசில் உள்ள 27 நதி அமைப்புகளைக் கடந்து அசாமில் உள்ள திப்ருகரை அடையும். எம்வி கங்கா விலாஸில் மூன்று தளங்கள், 18 சொகுசு அறைகள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன. முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து 32 சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் வாரணாசியில் இருந்து புறப்பட்ட கங்கா விலாஸ் பயணிகள் சொகுசு கப்பல் பீகாரின் சாப்ராவில் தரை தட்டி நின்றது. சாப்ராவில் கங்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆழம் இல்லாத இடத்தில் கங்கா விலாஸ் கப்பல் தரை தட்டி நின்றது. காசியில் புறப்பட்ட கங்கா விலாஸ் கப்பல் 51 நாட்களில் 27 நதிகளை கடந்து அசாமில் உள்ள திப்ரூகர் சென்று சேரவேண்டும். இன்று பீகாரின் சிரண்ட் துறைமுகத்தில் நங்குரமிட்டு அங்குள்ள தொன்மையான இடங்களை பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சாப்ராவில் பாயும் கங்கையில் போதிய ஆழமும், நீரும் இல்லாததால் துறைமுகம் செல்ல முடியாமல் வழியிலேயே நின்றது. கங்கா விலாஸ் கப்பல் தரை தட்டிய தகவலறிந்து பயணிகளை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.