×

பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் வெட்டிக்கொலை! கர்நாடகாவில் பரபரப்பு

 

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடக மாநிலம் தக்கின கன்னடா மாவட்டம் புட்டூர் தாலுக்காவில் உள்ள பெல்லாராய் என்ற கிராமத்தில் நேற்று இரவு பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரவீன் நெட்டாரு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  பிரவீன் கொலையை தொடர்ந்து பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர்கள் புட்டூர், சூல்யா மற்றும் கடப்பா ஆகிய மூன்று தாலுக்காவில் இன்று முழு பந்த் நடத்துவதாக தெரிவித்தனர். பதட்டமான சூழல் காரணமாக இந்த மூன்று தாலுகாவில் கடைகள் அடைக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் தானாக விடுமுறை அறிவித்துள்ளன. 

மூன்று தாலுகாக்களில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். பிரவீன் மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் இதுவரை 15 நபர்களை சந்தேகத்தின் பேரில் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக புட்டூர், சூல்யா மற்றும் கடப்பா ஆகிய மூன்று தாலுக்காவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பிரவீன் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லும் போது தடையை மீறி இந்துத்துவா அமைப்பினர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்‌. பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. சாலையில் டயர்கள் வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்து வருகின்றனர்.