தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது எப்படி?? - ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..
ஒரே நாளில் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது எப்படி என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒன்றிய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமைப்பு முன்பு நடைபெற்று வருகிறது . இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். முதல் நாள் விசாரணையின் போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்திற்கும், தேர்தல் ஆணையர் நியமனத்திற்கும் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன?; அவ்வாறு பின்பற்றப்படும் நடைமுறைகளில் என்ன என்றும் கேள்வி எழுப்பினர். கடந்த ஏழு ஆண்டுகளில் 8 தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது எப்படி என்றும், அவர்கள் நீண்ட காலம் பதவியில் இருக்கக் கூடாது என்று தெரிந்து குறுகிய கால அடிப்படையில் அவர்களை நியமிக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
குறிப்பாக இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, புதிய தேர்தல் ஆணையராக பஞ்சாபை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டது நீதிபதிகளுடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது நியமனம் தொடர்பாக நேற்றைய விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற சில தினங்களில் அவர் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு எந்த மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்ட என்பது தொடர்பான கோப்புகள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அரசியலமைப்பின் கீழ் செயல்படும் அமைப்பு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தார்.
அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், அருண் கோயல் நியமனம் தொடர்பான கோப்புகளை கண்டிப்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் இன்று கோப்புகள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. 5 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்ந்தெடுத்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். அப்போது பரிசீலிக்கப்பட்ட 5 அதிகாரிகளில் அருண் கோயல் தான் இளையவர் என்பதை கோப்பில் இருந்து நீதிபதி ஜோசப் வாசித்தார்.
மேலும், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயிலை எப்படி நியமித்தீர்கள் என்றும் , மே மாதத்திலிருந்து காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி நவம்பர்-17 உச்சநீதிமன்றம் வழக்க விசாரிக்க தொடங்கிய பிறகு நிரப்பப்பட்டுள்ளது ஏன் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விருப்ப ஓய்வு பெற்றதெல்லாம் சாதாரண நடவடிக்கையாக என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி அருண் கோயில் ஓய்வு பெற உள்ள நிலையில், அது விருப்ப ஓய்வு என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். ஆனால் அருண் கோயல் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என்பதை முதலில் தெரிவிங்கள் என்று நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.