×

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை முதலிரவில் மாரடைப்பால் மரணம்

 

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த புதுமாப்பிள்ளை, முதல் இரவின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம்,  மதனப்பள்ளி சந்திரா காலனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத் என்பவருக்கும் கடந்த 12-ஆம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இருவரும்  காதலித்து  இருவீட்டு  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் காதலை ஏற்று திருமணம் செய்த நிலையில் திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இரவு முதலிரவு அறைக்கு புதுமண தம்பதிகளை சடங்குகள் செய்து அனுப்பி வைத்தனர். அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் துளசி பிரசாத் மயங்கி விழுந்தார். 

இதனால் செய்வதறியாமல் மணப்பெண் அறையில் இருந்து வெளியே வந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள்  தெரிவித்தனர். இறந்த துளசி பிரசாத்தின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.