×

அடப்பாவமே.. வயிற்றுக்குள் டீ கிளாஸ்.. ஆனா வாய் வழியா போகலயாமே - ட்விஸ்ட்டே இங்க தான்! 

 

மனிதர்களில் ஒருசிலர் உணவை தவிர மற்ற அனைத்தையும் விழுங்குவார்கள். ஏன் அதனை விழுங்கிறார்கள் பசிக்கொடுமையா என்று தெரியவில்லை. அவ்வப்போது சாப்பிடவே முடியாத ஒரு பொருளை விழுங்குவதும் அதனை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அகற்றுவதும் வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கொசாவா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதா செல்போனை விழுங்கியதும், அறுவைச் சிகிச்சையில் வெளியே எடுத்ததும் ஒரு உதாரணம்.

அந்த வகையில் தற்போதைய கேஸ் கொஞ்சம் விநோதமானது. பீகாரைச் சேர்ந்த முதியவர் டீ கிளாஸை விழுங்கிவிட்டதாக மருத்துவர்களிடம் மெடிக்கல் மிராக்கிள் கேஸ் வந்திருந்திருக்கிறது. முசாஃபர் நகரைச் சேர்ந்த 55 வயது அந்த முதியவருக்கு சில நாட்களாகவே மல சிக்கல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் அடிவயிற்றில் அடிக்கடி சுளிர் சுளிர் என வலியும் இருந்துள்ளது. உடனே பதறியடித்துக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்.

மருத்துவர்களிடம் அந்த கிளாஸ் மேட்டரை இவர் காட்டிக்கொள்ளவில்லை. அவர்களும் துருவி துருவி கேட்டுள்ளார்கள் மூச்சே விடவில்லையாம். இது வேலைக்காகது என எண்ணிய மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க தீர்மானித்துள்ளனர். எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பதற்றத்துடனே ஸ்கேன் இயந்திரத்தில் படுத்திருக்கிறார். அப்போது கூட அவர் வாயே திறக்கவில்லை. எக்ஸ்ரேயில் வயிற்றில் ஏதோ ஒரு பெரிய பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

குடலில் இருந்ததால் முதலில் ஆசன வாய் வழியே எடுக்கலாம் என தீர்மானித்துள்ளனர். ஆனால் எடுக்க முடியவில்லை. உடனே அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்து வயிற்றை கிழித்து பார்த்த போது தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஆம் குடலில் இருந்தது டீ குடிக்கும் கிளாஸ். இதுகுறித்து கேட்டதற்கு அவர் டீ குடிக்கும்போது விழுங்கிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்க, மேற்கொண்ட தகவல் எதையும் சொல்ல அவரோ அவரது குடும்பத்தினரோ தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து மருத்துவர்களிடம் விசாரிக்கையில், "மனிதர்களின் தொண்டை மற்றும் உணவு குழாய் பகுதி ஒரு டீ கிளாஸ் செல்லும் அளவிற்கெல்லாம் பெரிதாக இருக்காது. அதனால் அதனை விழுங்கியிருக்க துளியும் சாத்தியமில்லை. இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. ஆசன வாய் வழியாகவே அதனை உள்ளே நுழைத்திருக்க வேண்டும். வேறு வழியே கிடையாது. அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் எதையோ மறைக்கிறார்கள். இருப்பினும் அவர்களின் தனி உரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம்" என்றனர்.