×

கைலாசாவில் வேலை வாய்ப்பு - உணவு, தங்குமிடம் இலவசம்

 

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வருவதாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நித்தியானந்தா.  இந்நிலையில் கைலாசா நாட்டில் வேலைவாய்ப்பு என்று ஒரு விளம்பர போஸ்டர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இது குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி பிரபலமானவர் நித்தியானந்தா.  இவர் பாலியல் மற்றும் மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்து வருகிறார்.  வெளிநாட்டில் தனித்தீவில் கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி வருவதாக அவ்வப்போது அறிவித்து வருகிறார். 

 கைலாசா நாட்டுக்கு என்று சட்டதிட்டங்கள்,  நாணயங்கள்,  பாஸ்போர்ட் என்று உருவாக்கி வருவதாக அவர் அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.  இந்த நிலையில் கைலாச நாட்டில் வேலைவாய்ப்பு என்று ஒரு விளம்பர போஸ்டர் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது  அதில்,  இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாசா கிளைகளில் தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு என்றும்,  ஓராண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு பின்னர் வெளிநாட்டு கைலாசாவில் பின்வரும் துறைகளில் வேலை வாய்ப்பு....  நித்தியானந்தா இந்து பல்கலைக்கழகம் , கைலாசாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள்,  கைலாசா ஐடி விங்,  கைலாசா அயல்நாட்டு தூதரகம்,  பிளம்மிங்- எலக்ட்ரிகல்ஸ் மற்றும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு என்றும்,  உணவு ,மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.  விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என்றும் அந்த விளம்பர போஸ்டரில் உள்ளன. 

 இந்த வேலை வாய்ப்பு விளம்பர அறிவிப்பு உண்மையா? மோசடியா? என்பது குறித்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்.