×

ஏழை வீட்டில் பிறந்த மகள் நான் - திரௌபதி முர்மு உரை

 

ஏழை வீட்டில் பிறந்த மகளாகிய தான், குடியரசுத் தலைவராக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இதனையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. முப்படைகள் புடைசூழ திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் குடியரசு துணை தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம்.பிர்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள், மூத்த தளபதிகள், பிற துறை தலைவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனா். 

பதவியேற்ற பின்னர் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசியாதாவது: குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம்.ஏழை வீட்டில் பிறந்த மகள் நான், குடியரசுத் தலைவராக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். 

சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் சுய மரியாதையை முதன்மையாக வைத்திருக்க கற்றுக் கொடுத்திருக்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.கொரோனா காலத்தில் உலகத்திற்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது. பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களது பிரதிபலிப்பாக பார்க்கலாம். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தைக் கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். இவ்வாறு க்கூறினார்.