×

அதிகாலை தொழுகையில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை தவிர்க்க முடிவு

 

கர்நாடக மாநிலத்தில் அதிகாலை தொழுகையில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை தவிர்க்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்த வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து மும்பை உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஒலிபெருக்கியில் இருந்து வரும் ஒலியை கட்டுப்படுத்த உரிய மின்னணு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கர்நாடக அரசு நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளையும் அமல்படுத்தியது. இந்த வழிமுறைகள் குறித்தான சுற்றறிக்கையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழிபாட்டுத் தலங்களில் முழுவதுமாக ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அதிகாலையில் மசூதிகளில் நடைபெறும் தொழுகையில் ஒலிபெருக்கியை முஸ்லிம் சமூக மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தினால் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க நேற்று இரவு பெங்களூருவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மத குரு கால் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அதிகாலைத் தொழுகையில் ஒலிபெருக்கியை பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மசூதிகளிலும் ஒலிபெருக்கியில் அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவை மீறாத வண்ணம் ஒலி கட்டுப்பாட்டு கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.