×

மே.வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

 


மேற்கு வங்க மாநிலத்தில் 8 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்றம், இருவாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள  ராம்பூர்ஹட் என்னும் ஊரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலமான நபர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. வன்முறையில் ஒரு கும்பல் குடிசை வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியது. இதில் குடிசை வீடிகளில் வசித்து வந்த குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 8 பேர் குடிசை வீட்டில் வைத்து எரித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் நாடையே உலுக்கியது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் மன்னிக்கப்படமாட்டார்கள் எனவும், சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வழங்கப்படும் எனவும் மம்தா பானர்ஜி உறுதி அளித்திருந்தார்.

8 பேர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கு வங்க மாநிலக் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்தி வந்தது. மேலும் இந்த வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 8 பேர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை விரைவாக புலனாய்வு செய்யவும், வழக்கின் நிலை அறிக்கையை ஏப்ரல் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.