ட்விட்டரில் மட்டுமே காங்கிரஸ் செயல்படுது.. களத்தில் காணவில்லை - குலாம் நபி ஆசாத் விமர்சனம்..
ட்விட்டரிலும், கம்ப்யூட்டரிலும் மட்டுமே காங்கிரசார் செயல்படுவதாகவும், களத்தில் எங்கும் காங்கிரசை காணவில்லை என்றும் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த மாதம் 26ம் தேதி அக்கட்சியில் இருந்து வெளியேறியானார். இந்திரா காந்தி காலத்தி இருந்தே சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருந்து வந்த அவர், திடீரென விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் , மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக கவுன்சிலர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் நவம்பர் 25ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், அதில் 90 சட்டமன்ற தொகுதிகளில் குலாம் நபி ஆசாத்தின் கட்சி போட்டியிடும் என்றும், ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வராக குலாம்நபி ஆசாத் தேர்வு செய்யப்படுவார் என்றும் அக்கட்சியினர் கூறி வந்தனர். இந்நிலையில், இன்று ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக விமானம் மூலம் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது பேருந்துகளில் சிறைக்குச் செல்கிறார்கள். டிஜிபி, கமிஷனர்களை தொடர்புக் கொண்டு பெயரை எழுதிக் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறிவிடுவார்கள். அதனால்தான் காங்கிரஸால் வளர முடியவில்லை. காங்கிரஸ் நம் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கணினியால் அல்ல. டுவிட்டரால் அல்ல. ஆனால் காங்கிரஸ் செயல்பாடுகள் கணினிகள் மற்றும் ட்வீட்களில் மட்டுமே உள்ளது. அதனால்தான் காங்கிரஸை களத்தில் எங்கும் காண முடியவில்லை. எனது கட்சி முழு மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் பூர்வீக குடியேற்ற உரிமையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும். எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது கட்சிக்கு இந்துஸ்தானி பெயரைச் சூட்டுவேன்” என்று தெரிவித்தார்..