×

உயிரிழந்த சிறுவனின் உடலை உப்பால் மூடி வைத்து கொடூரம்! உயிர்தெழுந்துவர பிரார்த்தனை

 

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலை 3 மணி நேரம் உப்பால் மூடிவைத்து உயிர்த்தெழுந்துவர பிரார்த்தனை செய்த கிராம மக்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் சிரவாரா என்ற கிராமத்தில் சேகர் மற்றும் கங்கம்மா ஆகிய தம்பதியரின் இளைய மகன் சுரேஷ் சிராவர் (வயது 10). கடந்த திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் தனது கிராமத்தில் இருந்த ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபமாக நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுரேஷின் உடலை சடலமாக மீட்டு வந்த போது கிராம மக்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலை சில மணி நேரங்கள் உப்புக் குவியலில் வைத்தால் சிறுவன் உயிர்பெற்றுத் திரும்பி வருவான் என்று ஒருவர் கூறியுள்ளார். 

மகனை இழந்த சோகத்தில் இருந்த குடும்பத்தினர், இதைச் செய்து பார்த்தால் தன்னுடைய மகன் திரும்ப உயிர் பெற்றுவிடுவானோ என நம்பியுள்ளனர். உடனே ஓர் உப்புக் குவியலை ஏற்படுத்தி சிறுவனின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துள்ளனர். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என நேரம் கடந்ததே தவிர, மகன் உயிர்த்து எழவில்லை. சுமார் மூன்று மணிநேர காத்திருப்புக்குப் பின்பு சிறுவன் இதற்கு மேல் மீண்டு வர வாய்ப்பு இல்லை என்று அறிந்து கொண்ட கிராம மக்கள் பின்பு தங்களது சடங்குகளை செய்து சிறுவனின் சடலத்தைத் தகனம் செய்தனர். மூடநம்பிக்கையின் உச்சமாக வலைதளங்களில் வரும் கருத்தை கொண்டு நடைபெற்றுள்ள இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.