×

ஆட்டோ - லாரி மோதல் : 7 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழப்பு

 

ஆட்டோ லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஏழு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த அந்த ஏழு பெண்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 கர்நாடக மாநிலத்தில் பிடர் மாவட்டத்தில் சித்தகுமாம் தாலுகாவைச் சேர்ந்த  பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலையில் வேலை முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்திருக்கிறார்கள்.   பிமலஹிடா என்கிற பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது,  சாலையில் எதிரே வந்த லாரி ஆட்டோ மீது வேகமாக மோதி இருக்கிறது.

 இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.   இந்த விபத்தில் லாரி, ஆட்டோ டிரைவர்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . படுகாயம் அடைந்த அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீச்சார் விசாரணை நடத்திய வருகின்றனர்.  இந்த விபத்தில் உயிரிழந்த 7 பெண்களின் விபரம் தெரியவந்திருக்கிறது.  பார்வதி( 40), பிரபாவதி(36), குண்டமா( 60), யாதம்மா(40), ஜக்கம்மா(34), ஐஸ்வர்மா(55), ருக்மணி பாய்(60)  ஆகிய 7 பெண்களும் உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.