×

இந்திய மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்க சீன அரசு முடிவு!

 

கொரோனாவால் படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு மீண்டும் படிப்பைத் தொடர  சீன அரசு வாய்ப்பளித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே சென்றது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்தன. இப்படி கொரோனா வைரஸ் தாக்கம் 2019 ஆம் ஆண்டு முதல் நம்மை வாட்டி வதைத்து வருகிறது.


தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் ஆரம்ப காலத்தில் கொரோனாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனாவால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அத்துடன் அங்கு கல்வி பயின்று வந்த மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களும் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பினர். தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர மீண்டும் சீனா வரலாம் என்று சீன அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வரும் 8ம் தேதி முதல் சீனாவில் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யலாம் பதிவு செய்யும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்த பின், படிப்படியாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.