மருத்துவ உலகின் அரிய நிகழ்வு - பிறந்த பெண் குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்
மருத்துவ உலகில் அரிய நிகழ்வாக பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கரு உருவாகி இருந்தது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கின்றன. பிறக்கும் 5 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கருவுக்குள் கரு உருவாகுதல் என்ற அடிப்படையில் கரு இருக்கும் என்றும், அப்படி இதுவரை ஒரு கரு மட்டுமே பிறந்த பெண் குழந்தைக்கு இருந்திருக்கிறது. தற்போது தான் உலகிலேயே முதன்முறையாக எட்டு கருக்கள் இருந்திருக்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்நகர் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருந்ததை மருத்துவர்கள் கவனித்துள்ளனர் . அதனால் அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன பின்னர் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது . அந்த கட்டியை எடுத்த போது அது நீர்க்கட்டி போல் இருந்துள்ளன. மருத்துவர்கள் அதை பரிசோதித்த போது அந்த நீர்க்கட்டிக்குள் 8 கருக்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு கருவும் 3 முதல் 5 சென்டிமீட்டர் வரை இருந்திருக்கின்றன.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்த குழந்தை அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
மருத்துவ உலகின் அரிய நிகழ்வாக பிறக்கும் குழந்தையின் வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகும். பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தான் இது போன்று உருவாகும் என்று ஆய்வுகள் உள்ளன. ஆனால் பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் உருவாகி இருந்தது இதுதான் முதல் முறை. இதை மருத்துவ உலகின் மிக அரிய நிகழ்வு என்று தெரிவித்திருக்கிறார் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இம்ரான்.