நித்யானந்தாவின் சொரூபமா? சத்யானந்தாவுக்கு தர்ம அடி
நித்தியானந்தாவே வழக்குகளுக்கு பயந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் சொரூபம் என்று சொல்லி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்த வாலிபர் சத்யானந்தாவுக்கு தர்ம அடி விழுந்திருக்குது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் அமைத்து உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பி புகழ்பெற்றார். ஒரே ஒரு வீடியோவால் தனது வளர்ச்சியில் தானே முட்டுக்கட்டை போட்டுக் கொண்டார். அதை அடுத்து அவர் மீது பல பெண்கள் புகார் அளிக்க, அது குறித்த வழக்குகளில், சர்ச்சைகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
அவர் கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக வீடியோ மூலமாக சொல்லி வருகிறார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் அங்கோலா தாலுக்காவில், அச்சிவே கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொரள்ளி கிராமத்தில் நித்தியானந்தா போலவே உடைகள் அணிந்து அவரைப் போலவே தலைமுடி வளர்த்துக்கொண்டு கிராமத்திற்குள் வலம் வருகிறார் ஒரு வாலிபர்.
தன்னை நித்யானந்தாவின் சொரூபம் என்றும் , தனது பெயர் சத்யானந்தா என்றும் சொல்லியும் பெண்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வந்திருக்கிறார். இது குறித்து அறிந்த பஜ்ரங் தள அமைப்பினர் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் அவரது உண்மையான பெயர் சேகர் படகர் என்பதும், அவர் ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்திருக்கிறது.
நித்தியானந்தாவின் பெயரைச் சொல்லி மோசடி செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபாட்டேன் என்று சேகரிடம் பஜ்ரம் தள அமைப்பினர் எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளார்கள்.