சிறப்பு ரயில்களில் இறந்த 80 தொழிலாளர்கள்.. அதிர்ச்சித் தகவல்!
தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் பயணம் செய்தவர்களில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உணவின்றி தாய் இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் குழந்தைகள் விளையாடிய வீடியோ கல்லையும் கறைக்கும் வகையில் உள்ளது. ஆனாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் வேதனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.
ரயில் எங்கேயும் நிற்காது என்று கூறப்பட்டதால், உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை மக்கள் எடுத்து வந்தனர். ரயிலிலேயே உணவு, தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை நம்பி பலரும் கையை வீசிக்கொண்டு வந்துவிட்டனர். கையில் பணம் இருந்தும் உணவு, தண்ணீர் வாங்க முடியாமல் உயிரிழந்ததாக பல கண்ணீர்க்கதைகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த மே 1ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 80 பயணிகள் உணவு, தண்ணீர் இன்றி ரயிலில் உயிரிழந்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 3840 தொழிலாளர் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. 52 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அதிகபட்சமான 80 சதவிகித ரயில்கள் உத்தரப்பிரதேசம், பீகாருக்கு இயக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
உணவு, தண்ணீர் இன்றி நான்கு வயதுக் குழந்தைகள் முதல் 85 முதியவர்கள் வரை இறந்துள்ளனர். தங்களால் உணவு கொடுக்க முடியாவிட்டால் தன்னார்வலர்களிடம் கூறியிருந்தால் கூட போதுமே, தொழிலாளர்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு உணவுகளால் நிரப்பியிருப்பார்களே, இந்த 80 உயிர்களை யார் திருப்பித் தருவது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.