ஒரே நாளில் 7 லட்சம் பரிசோதனைகள் #CoronaUpdates
கொரோனா இல்லாத பழைய நிலைக்கு என்றைக்கு இந்தியா திரும்பும் என்று தெரியவில்லை. ஏனெனில், ஒவ்வொரு நாளும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.
லாக்டெளன் உள்ளிட்ட பல முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்தும் நோய்த் தொற்றுவதையும் பரவுவதையும் முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் நம் வசம் இருப்பது, அதிகளவில் பரிசோதனைகள் செய்வது. அப்படிச் செய்கையில் நோய்த் தொற்றியவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து குணமாக்க முடியும்.
அதற்கான முயற்சிகளில் இந்தியா தொடக்கம் முதலே அதிகளவில் முனைப்பு காட்டிவருகிறது.
நேற்று மதிய நிலவரப்படி, ஒரே நாளில் நேரத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகளைச் செய்துள்ளது.
ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகளை தொடர்ந்து பல நாட்களாக நடத்தி வந்த இந்தியாவின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364 சோதனைகள் நடைபெற்றன.
இது போன்ற அதிக அளவிலான சோதனைகள் காரணமாக, தினசரி பாதிப்பின் எண்ணிக்கை உயர்வதற்கு வழி ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களை விரிவாகக் கண்டறிந்து, அவர்களை உரிய முறையில் தனிமைப்படுத்தி, சிறந்த சிகிச்சை வழங்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய அணுகுமுறைக்கு உரிய பலன் கிட்டத்தொடங்கியது. குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. சாதனை அளவாக, நேற்று, ஒரே நாளில் மட்டும் 53,879 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்துடன், மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,80,884 என்ற மற்றொரு புதிய உச்சத்தை இந்தியா இன்று அடைந்துள்ளது. இது, தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குணமடைந்தோர் விகிதம் உயர்ந்து இன்று 68.78 சதவீதமாக இருந்தது.
இந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளின் பயனாக, இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்று இறப்பு விகிதம் 2.01 சதவீதம் என்ற அளவில் குறைந்தது.