×

நச்சு கலந்த கிணற்று நீரை குடித்த 6 பேர் பலி... ஆபத்தான நிலையில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள்!

 

கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் மகரப்பி என்ற கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்திலுள்ள ஆழ்துளை கிணற்று நீரில் நச்சுத்தன்மை வாய்ந்த கனிமத் துகள்கள் கலந்து மாசடைந்துள்ளதாக கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சில நாட்கள் அந்த நீரைப் பயன்படுத்தாமல் துங்கபத்ரா அணையிலிருந்து குழாய்கள் மூலம் கிடைக்கும் குடிநீரைப் பயன்படுத்தியுள்ளனர். 

இச்சூழலில் சில நாட்களாக இந்தக் குழாய்களில் தண்ணீர் வராததால் வேறு வழியில்லாமல் கிராம மக்கள் மாசடைந்த ஆழ்துளை நீரையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த அசுத்தமான நீரை குடித்ததால் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு தலை சுற்றலும், மயக்கமும் உண்டாகியுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உடல்நலம் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 
இச்சம்பவத்தை அடுத்து, விஜ‌யநகர் மாவட்டம் ஆழ்துளைக் கிணற்றின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திய ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டுள்ளது. டேங்கர் லாரிகள் மூலம் மகரப்பி கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை, ''அசுத்தமாக நீர் குடித்து 6 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.