×

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 பேருக்கு பாசிட்டிவ்... 150 ஊழியர்கள் பாதிப்பு - ஷாக்கில் டெல்லி!

 

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த ஒமைக்ரான் பாதிப்போ 4 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைத்துவிட்டன. இருப்பினும் அத்தியாவசிய பணிகளுக்கான அலுவலகங்கள் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 100 சதவீத அலுவலர்களுடன் செயல்படுகின்றன.

அதேபோல நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் அலை முடிவடைந்த பின் நீதிமன்றங்களில் நேரடி விசாரணையே நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஆன்லைன் மூலமே வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முக்கியமான அவசரமான வழக்குகள் மட்டுமே குறிப்பிட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது மூன்றாம் அலை தொடங்கியபோதிலும் நீதிமன்றங்களில் நேரடியாகவே விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

இச்சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 32 நீதிபதிகளில் 4 பேருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 150 பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரம் பணியாளர்களில் 5 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சிலர் பிசிஆர் பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருக்கிறார்கள். அந்த முடிவுகள் வந்தபின் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.