×

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேர் கைது!

 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் உள்ள உலைபெட்டு என்ற பகுதியில் டைல்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தம்பதியினர், தங்களது 8 வயது சிறுமியை காணவில்லை என காவல்துறையிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை புகார் அளித்தனர். அதே நாள் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் பராரி என்ற இடத்தில் உள்ள சாக்கடையில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது தங்களது தொழிற்சாலையில் வேலை செய்யும் நபர்கள் சிலர் மீது தங்களுக்கு சந்தேகமாக உள்ளதாக தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் வேலையில் இருந்த 19 தொழிலாளர்களையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 19 நபர்களில் சிறுமியைக் கொன்ற நான்கு நபர்களை இன்று கைது செய்துள்ளனர். 

தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நான்கு நபர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்திவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பிறகு கொலை செய்து அருகில் இருந்த சாக்கடையில் வீசிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.