×

இந்திய கப்பலில் திடீர் வெடிவிபத்து... 3 நேவி அதிகாரிகள் உடல் கருகி பலி - மும்பையில் அதிர்ச்சி!

 

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் மும்பையிலுள்ள கடற்படை தளத்தில் நேற்று மாலை அரங்கேறியுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்ட போது மும்பை கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு தேவைக்காக கப்பலுக்குள் எப்போதும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகள் எப்போதுமே ஜாக்கிரதையாகக் கையாளப்படும். 

ஆனால் நேற்று எதிர்பாராவிதமாக அந்த அறையில் திடீரென தீ பற்றியுள்ளது. அந்த தீ மளமளவென வெடிபொருளிலும் பரவியுள்ளது. இதனால் பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே மூன்று கடற்படை வீரர்கள் உடல் கருகில் நிலையிலேயே உயிரிழந்துவிட்டனர். விபத்து ஏற்பட்டவுடனே அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் உயிரிழந்த மூவரும் மயக்கமடைந்த காரணத்தாலேயே அவர்களால் உயிர் பிழைக்க முடியவில்லை. மேலும் 11 அதிகாரிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மூன்று பேரின் சடலங்களும் பெரும் போராட்டத்திற்கு பின்பே மீட்கப்பட்டன. மூன்று பேர் பலியான நிலையிலும் கப்பலுக்கோ கப்பலில் உள்ள கடற்படை கருவிகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை. மேலும் தீயணைப்பு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால் உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து எப்படி எதனால் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. வெடி விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும்.