மனைவியின் மடியில் உயிர்விட்ட கணவன்: கொரோனாவில் இருந்து மீண்டதும் நேர்ந்த துயரம்
ஆந்திர மாநிலத்தில் குடிபள்ளே மண்டலம் மிட்டூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தன் மனைவியுடன் பிழைப்பு தேடி பெங்களூரில் குடிபெயர்ந்தார். அங்கே வியாபாரம் செய்து வந்த நிலையில் சந்திரசேகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவரும் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
15 நாட்கள் சிகிச்சை முடிந்து கொரோனாவில் இருந்து இருவரும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதை அடுத்து சந்திரசேகரும் அவரது மனைவியும் பெங்களூரு திரும்பி மீண்டும் வியாபாரத்தை கவனிக்க முடிவு செய்தனர். இதனால் பெங்களூரு செல்வதற்காக குப்பம் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
குப்பம் ரயில் நிலையத்தில் பெங்களூரு செல்வதற்கான ரயில் வரும் வரை இருவரும் காத்திருந்தனர். அப்போது சந்திரசேகருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அதிகமாகி அவர் துடித்ததும், அவரது மனைவி தனது மடியில் கணவனை சாய்த்துக்கொண்டு, நெஞ்சை தடவிக் கொடுத்தார்.
அப்படியே சந்திரசேகரின் உயிர் பிரிந்துவிட்டது. கொரொனாவிலிருந்து குணமாகி வந்த பின்னரும், தன் கணவர் இறந்துவிட்டாரே, தன் மடியிலேயே உயிர் போய்விட்டதே என்றதும், சந்திரசேகரின் மனைவி கதறினார்.
இந்த சம்பவம் ரயில்நிலையத்தில் இருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.